அருள்மிகு சிவகாசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தலவரலாறு || Sivakasi shivan Temple History || கோவில் தலவரலாறு || சிவகாசி பெயர் காரணமும் சிவன் கோவிலின் சிறப்புகளும்...

அருள்மிகு சிவகாசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தலவரலாறு || Sivakasi shivan Temple History:

மூலவர் காசிவிஸ்வநாதர்
அம்மன்/தாயார் விசாலாட்சி
ஊர் சிவகாசி
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. சிவகாசியில் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. சிவன் காசியில் இருந்து வந்து தங்கிய இடம் என்பதால், இந்த திருத்தலம் ‘சிவன் காசி’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே நாளடைவில் ‘சிவகாசி’ என்று உருப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

திருப்பதிக்கு முதல் எழுத்தும், இறுதி எழுத்தும் ஒரே எழுத்தாக உள்ளது போல, இத்தலத்துக்கும் சிறப்பிருக்கிறது.

இத்தலத்தில் மூலவர் விஸ்வநாதர், விசாலாட்சி, துர்கை, வள்ளி தெய்வானையுடன் முருகன், விநாயகர், நடராஜர், மீனாட்சி, வீரபத்திரர், பைரவர் மற்றும் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் போன்ற சனகாதி முனிவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கிய நிலையில் உள்ள சன்னதிகள் உள்ளன.
சிவகாசி காசிவிஸ்வநாதர் தலவரலாறு:
பொதிகை மலைப் பகுதியில் உள்ள தென்காசியில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வர, தன் மனைவியுடன் சென்றான். கங்கையில் புனித நீராடி ஒரு காராம் பசு மீது லிங்கத்தை ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி சென்றான்.

பலநாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி நகரம் உள்ள இடத்தில் தங்கினான். அப்போது சிவகாசி வில்வ வனக் காடாக இருந்தது. மறுநாள் அரசனின் மனைவிக்கு பயணம் செய்ய முடியாதபடி உடல்நிலை மோசமானது. உடன் வந்த காராம் பசுவும், மன்னனுடன் வர மறுத்தது. இதனால் சிவலிங்கத்தை தென்காசிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உருவானது.

இதையடுத்து மன்னன், காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை வில்வ வனக் காட்டிலேயே பிரதிஷ்டை செய்தான். அந்த சிவலிங்கமே காசி விஸ்வ நாதர் என்று அழைக்கப்படுகிறது. அரிகேசரி பராங்குச மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள், இந்தக் கோவிலில் மண்டபங்கள், பிரகாரம், தீர்த்தம், சுற்றுமதில், ரத வீதிகளை அமைத்து திருப்பணிகளைச் செய்தனர்.

இந்துக்கள் அனைவரும் தன் வாழ்வில் ஒரு நாளேனும் காசி யாத்திரை சென்று வர வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். ஆனால் இன்றைய நவீன வசதி படைத்த காலத்திலும் கூட பலரால் காசிக்கு சென்று வர முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள், சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதரை வணங்கி வழிபட்டாலே போதுமானது. காசியில் வழிபட்ட பலனைப் பெறலாம்.


தலபெருமை:
மன அமைதி தருபவர்:
காசி சென்றவர்கள் பற்று ஆசையை விடுவதற்காகவே செல்கின்றனர். இவ்வளவு போக்குவரத்து மிகுந்த காலத்திலும் கூட காசிக்கு செல்ல முடியாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காசிக்குப் பதிலாக இத்தலத்து இறைவனைத் தரிசித்தாலே போதுமானதென்ற நம்பிக்கை இருக்கிறது. சுவாமியுடன் விசாலாட்சி அம்மையும் இங்கு தரிசனம் தருகிறாள். இவர்களை வணங்கினால் மன அமைதி கிடைக்கிறது. பவுர்ணமி, சங்கடஹரசதுர்த்தி மற்றும் பிரதோஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
வெளிநாடு செல்கிறீர்களா:
சிவகாசியில் கோயிலைக் கட்டிய பராங்குச மன்னன் தன் தவ வலிமையால் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். அவன் துறவுநிலை மேற்கொண்ட பின் பராசரர் என்று அழைக்கப் பட்டான். இதன்பின் தினமும் ஆகாய மார்க்கமாக சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டு சிவகாசியிலும் இறங்கி காசிலிங்கத்தை வழிபட்டு பின் தென்காசி செல்வது வழக்கம். எனவே, விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் சிவகாசி, காசி விஸ்வநாதரை 11 வாரம் சென்று தரிசிப்பதன் மூலம் பாதுகாப்பான பயணம் அமைவதாக நம்பிக்கையுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு செல்பவர்களும், தொழிலதிபர்களும் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

தொழில் வளம் பெருக வழிபாடு:
சிவகாசிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல ஊர்களை சேர்ந்த வணிகர்கள் வியாபாரம் தொடர்பாக வந்து போனார்கள். அவர்கள் இங்குள்ள விஸ்வநாத சுவாமி கோயிலில் வழிபாடு நடத்த தவறுவதில்லை. வருமான அதிகரிப்பால், ஒரு கட்டத்தில் கிராமமாய் இருந்த நகரமாகி விட்டது. தங்கள் வளர்ச்சிக்கு காரணம இந்த காசி விஸ்வநாதரே என்பது வணிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அச்சுத்தொழில், காலண்டர், படங்கள், தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தியில் உலகப் புகழ் பெற்று குட்டி ஜப்பான் என்று புகழப்படும் அளவுக்கு இவ்வூர் வளரக் காரணமாகி விட்டார் சிவகாசி விஸ்வநாதர். தங்கள் தொழில் வளம் பெருக வணிகர்கள் விஸ்வநாதருக்கு 11 வாரம் சிவவழிபாடு செய்து தொழில்களை துவக்கி வெற்றி பெறுகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post